நெல்லை, செப். 10: கவர்னரின் விருதுக்கான சாரண, சாரணியர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம் பாபநாசம் மலையில் 3 நாட்கள் நடந்தது. இதில் 238 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சாரண, சாரணியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கவர்னர் மூலம் விருது வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்ட அளவில் பள்ளி சாரண, சாரணியர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் தேர்வு முகாம் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான நெல்லை மாவட்ட அளவிலான தேர்வு முகாம் பாபநாசம் மலையில் உள்ள சுந்தரபவனம் மையத்தில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 152 சாரணர், 86 சாரணியர் என 238 பேர் மற்றும் 35 சாரண ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு மாநில பயிற்சியாளர் நாகராஜன் தலைமையில் 8 பேர் பயிற்சி அளித்தனர்.பயிற்சியில் சாரணர்களின் பணி, கடமைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முகாமை சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் சுடலை, மாவட்ட சாரணியர் செயலாளர் டைட்டஸ் ஜான் ஆகியோர் ஆய்வு செய்தனர். முகாமில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி மற்றும் தேர்வு முடிவுகள் மாநில சாரண அமைப்பிடம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 பேர் மட்டும் கவர்னரிடம் நேரடியாக விருது பெறுவார்கள்.
.