சேலம், செப்.10: இடைப்பாடி ஆர்சி ரெட்டியூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திருவிழாவில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர். சேலம் மறை மாவட்ட இடைப்பாடி பங்குக்கு உட்பட்ட ஆர்சி ரெட்டியூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி சிறப்பு வழிபாடு, சிறு தேர் பவனி, நவநாள் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அன்னையின் ஆடம்பர தேர் பவனி மற்றும் கூட்டுத்திருப்பலி சேலம் சிறுமலர் மெட்ரிக் பள்ளி முதல்வர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. சிறப்பு மறையுறை நற்செய்தியை புனித தெரசாள் தொழிற்பயிற்சி நிலைய மேலாளர் ஆசீர்வாதம் வழங்கினார். முன்னதாக சபை மக்கள் மங்கல ஆராத்தி எடுத்து குருக்களை வரவேற்றனர். ஏற்பாடுகளை பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். அன்னையின் தேர் பவனி ஆர்சி ரெட்டியூர் முழுவதும் வலம் வந்தது. இந்த ஊர்வலத்தின்போது ஏராளமான கிறிஸ்தவர்கள் அன்னையை போற்றி பாடல்களை பாடியவாறு சென்றனர்.