×

டூவீலர்கள் நேருக்குநேர் மோதல் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி மேலும் இருவர் படுகாயம்

சூளகிரி, செப்.10:  சூளகிரி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர், டெய்லர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி நெருப்புக்குட்டை பகுதியை  சேர்ந்த விவசாயி தனபால், ரத்னா தம்பதியின் மூத்த மகன் தமிழரசன்(19). இவர், தர்மபுரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் சதீஷ்(17), அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை, வழக்கம்போல் தமிழரசன் தனது டூவீலரில், சதீசுடன் கல்லூரிக்கு சென்றார். அப்போது எதிரே வரட்டனப்பள்ளியை சேர்ந்த டெய்லர் சின்னலட்சுமணன்(48), அவரது மனைவி முனிரத்தினா(42) ஆகிய இருவரும், கெலமங்கலத்தில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக டூவீலரில் வந்து கொண்டிருந்தனர்.

வரட்டனப்பள்ளி எல்லையில் வந்தபோது, 2 டூவீலர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தமிழரசன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும், அருகில் உள்ள விவசாய நிலத்தின் வாய்க்காலில் விழுந்தனர். சின்னலட்சுமணன், முனிரத்தினா ஆகியோர் சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த தமிழரசன், சின்னலட்சுமணன் ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய சதீஷ் மற்றும் முனிரத்தினாவை மீட்ட அக்கம்பக்கத்தினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சதீஷ் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், முனிரத்தினா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த தகலறிந்து வந்த உத்தனப்பள்ளி போலீசார், தமிழரசன், சின்னலட்சுமணன் ஆகியோரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக  ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது