×

மாணவ, மாணவிகளுக்கு வரும் 14ல் கலைப்போட்டி

தர்மபுரி, செப்.10: தர்மபுரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப்போட்டி வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், மாவட்டக் கலைப் போட்டிகள் தர்மபுரி டவுன் அப்பாவு நகர் அரசு நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் இம்மாதம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் நடைபெறுகிறது. 6ம் வகுப்பு முதல் பிளஸ்1 வரை படிக்கும் மாணவ மாணவிகள் பங்கு பெறலாம். 6 முதல் 8ம் வகுப்பு வரை ஜுனியர் பிரிவாகவும் 9 முதல் 11 வரை சீனியர் பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும். காலை 10 மணிக்கு பாட்டுப் போட்டி, பரதநாட்டிய போட்டி, கிராமிய நடனப் போட்டி நடைபெறும். பாட்டுப் போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம்.

தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரதநாட்டியப் போட்டியில் அதிக பட்சம் 5 நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியிலும் கிராமிய நடனப் போட்டியிலும் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. கிராமிய நடனத்தில் முறையான கரகம், காவடி, பொய்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், ஓயிலாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்களாக இருக்க வேண்டும். பகல் 2 மணிக்கு ஓவியப் போட்டி நடைபெறும்.
பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு பெறும் சிறார்கள் அரசின் செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர். மேலும் விவரம் வேண்டுவோர் தர்மபுரி ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Art competition ,
× RELATED இளையான்குடியில் வட்டார அளவிலான கலைப்போட்டி