×

வெள்ளோடு ஊராட்சியில் குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தல்

ஈரோடு, செப். 10: தென்முகம் வெள்ளோடு ஊராட்சியில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்முகம் வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட 4வது வார்டு கொம்பனை பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி எதுவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால், வேறு வழியின்றி அருகில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், குளத்தை தூர்வாராமல் ஊராட்சி நிர்வாகம் விட்டு விட்டதால் குளத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அதிருப்தியடைந்த மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளித்தனர்.

Tags : Velodu ,
× RELATED வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் ரூ.4.90...