×

அதிரை பகுதியில் கடல் சீற்றம் துறைமுக வாய்க்காலில் சேறும் சகதியாக இருப்பதால் மீனவர்கள் அவதி

அதிராம்பட்டினம், செப். 10: அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடல் சீற்றம் குறைந்த நாட்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் அதாவது அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு தரகர் தெரு , ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் என இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை எடுத்து செல்ல துறைமுக வாய்க்காலுக்கு செல்வர். அப்போது அடிக்கடி கடலில் ஏற்படும் சீற்றங்களால் கடலின் தரைப்பகுதியில் உள்ள சேறு அனைத்தும் துறைமுக வாய்க்காலில் வந்து விடுவதால் மீனவர்கள் தங்களது படகுகளை எடுக்க வாய்க்காலில் இறங்கும்போது முழங்கால் அளவுக்கு சேறு இருப்பதால் நடக்க முடியாமலும் படகுகளை எடுத்து செல்லவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதனாலேயே பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டாமல் இருந்து விடுகின்றனர்.

இதுகுறித்து காந்திநகர் பகுதியை சேர்ந்த மீனவர் சுந்தர்ராஜ் கூறுகையில், சாதாரணமாக எங்கள் துறைமுக வாய்க்கால் நீண்ட வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. இதனால் சேறு நிறைந்து போட்டை கடலுக்குள் இழுத்து செல்ல சிரமப்பட்டு வந்தோம். இந்நிலையில் சமீபகாலங்களாகவே தொடர்ந்து கடலில் சீற்றம் ஏற்பட்டு வருவதால் கடலில் உள்ள சேறு அனைத்தும் துறைமு வாய்க்காலில் வந்து தேங்கி விடுகிறது. இதனால் எங்களால் துறைமுக வாய்க்காலில்இருந்து கடலுக்கும் கடலில் இருந்து மீன் பிடித்து விட்டு திரும்பி வந்து துறைமுகத்தில் படகை நிறுத்துவதற்கும் சிரமமாக உள்ளது. எனவே எங்களின் நிலை கருதி அரசு உடனடியாக துறைமுக வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றார்.

Tags : Fishermen ,harbor ,part ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...