×

தோப்பில் சடலமாக கிடந்தார் நாகர்கோவில் அருகே வாலிபர் மர்ம சாவு உறவினர்கள் அதிர்ச்சி

நாகர்கோவில், செப். 10: நாகர்கோவில் அருகே உள்ள குஞ்சன்விளை பகுதியில் உள்ள தோப்பில், நேற்று காலை வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்தது. இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 38 வயது இருக்கும். ரோஸ் கலரில் சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தார். தலைகுப்புற நிலையில் உடல் கிடந்தது. அவரது முகத்தில் பலத்த காயமும் ஏற்பட்டு இருந்தது. அவரது சட்டை பையில் ஒரு ஆதார் அட்டை இருந்தது. அதில் நேவிஸ் விஜில், தெற்கு தெரு, அகஸ்தீஸ்வரம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து இறந்து கிடந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேவிஸ் விஜிலின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதனர்.
நேவிஸ் விஜில் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.  மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து இருக்கலாமா? என்ற சந்தேகம் உள்ளது. அவரது உடல் கிடந்த இடத்தின் அருகில் மது பாட்டில்களும் கிடந்தன. எனவே கும்பலாக வந்து மது அருந்தியதில் தகராறு ஏற்பட்டு இருக்கலாம். அதில் யாராவது நேவிஸ் விஜிலை தாக்கி இருப்பார்களா? என்ற சந்தேகம் உள்ளது. இது பற்றி போலீசார் கூறுகையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் சுசீந்திரம்  போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் உடல் கிடந்த இடம், கோட்டார் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்பது தெரிய வந்தது. எனவே இது குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Relatives ,youngster mystery death ,Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...