×

ஜிப்மர் போலி சான்றிதழ் விவகாரம் நடவடிக்கை எடுக்காத அனைவரும் குற்றவாளிகள்

புதுச்சேரி, செப் 10:  புதுச்சேரி  பெற்றோர் மாணவர் நலச்சங்க தலைவர் வை. பாலா  வெளியிட்டு அறிக்கை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்காக 54 இடங்கள் ஒதுக்கபடுகிறது. நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி மாணவர்களுக்கான இட  ஒதுக்கீட்டில்  முறைகேடாக வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம்பெற்றதாக ஜிப்மர் நிர்வாகம், வருவாய்த்துறை செயலர், கலெக்டர், கோரிமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வெளிமாநில  மாணவர்கள்  சேர்த்துக்கொள்ள மறுக்கப்பட்டனர். இதனையும் மீறி 3 பேர் போலியாக  புதுச்சேரி இருப்பிடச்சான்றிதழ் பெற்று ஜிப்மரில் விண்ணப்பித்தனர்.இது குறித்து எங்களுடைய சங்கத்தின் மூலம் புகார் அளித்தோம்.  இதற்கிடையே  ஜிப்மர் நிர்வாகம் போலி ஆவணங்கள் கொடுத்து எம்பிபிஎஸ் சேர்ந்த புகாரில்  புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் குமாரிடம் விசாரணை நடத்தியது. அப்போது போலி ஆவணங்கள் கொடுத்ததற்காக உங்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டுள்ளனர். இதில் தொடர்புடைய எம்பிபிஎஸ் மாணவி கிருத்திகா தலைமறைவாகியுள்ளார். ஜிப்மர் மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதியுடன் முடிவுற்றது.

புதுச்சேரி ஒதுக்கீட்டிகல் போலி ஆவணங்கள் மூலம் வெளிமாநில மாணவி சேர்ந்துள்ளார். இந்த இடத்தில் வேறு மாணவரை தற்போது சேர்க்க முடியாது.  முறைகேடு அம்பலமானதால் அந்த இடம் காலியானது.  உடனே நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரி மாணவருக்கான கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பேராசிரியர் குமார், அதற்கு துணைபோன வருவாய் அதிகாரிகள் தவறான சான்றிதழ் என தெரிந்தும் மாணவிக்கு இடம் கொடுத்த டீன் சாமிநாதன், புகாரை ஏற்க மறுத்த காவல்துறை என அனைவரும் குற்றவாளிகள்தான். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுவோம் என்றார்.


Tags : Jibmer ,
× RELATED எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ...