×

காதல் பிரச்னையில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு மாணவனுக்கு தர்மஅடி =சிதம்பரத்தில் பயங்கரம்

சிதம்பரம், செப். 10: காதல் பிரச்னையில் கல்லூரி மாணவி மீது சக கல்லூரி மாணவன் ஆசிட் வீசிய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டாக ஒருதலை  காதலால் ஆசிட் வீச்சு, வெட்டி படுகொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து  வருகிறது. சென்னை ரயில்வே நிலையத்தில் வைத்து மாணவி சுவாதி வெட்டி படுகொலை  செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2016ம் அண்டு ஆகஸ்ட் 30 கரூரில் கல்லூரி  மாணவி சோனாலியை, அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் உதயகுமார்  வகுப்பறையில் நுழைந்து கட்டையால் அடித்து கொலை செய்தார். பின்னர் கைது செய்யப்பட்ட  உதயகுமார், தன் காதலை ஏற்றுக்கொள்ளாததால் கொலை செய்ததாக கூறினான். அதனை  தொடர்ந்து தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினாவை, சீகன் கோமஸ் என்பவர்  பள்ளி வளாகத்தில் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். திருச்சியில் காதலை ஏற்றுக்கொள்ளாததால்  மோனிஷா என்ற கல்லூரி மாணவியை, பாலமுருகன் என்பவர் கத்தியால்  குத்தியிருக்கிறார். உடனே சுற்றி இருந்த பொதுமக்கள் கற்களை எடுத்து  பாலமுருகன் மீது வீசி தாக்கி, அவனை சுற்றி வளைத்து போலீசில்  ஒப்படைத்தனர்.

புதுச்சேரியில் ரோஸ்லின் என்ற கல்லூரி மாணவி, எழிலரசன்  என்பவரின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ரோஸ்லினை அரிவாளால் வெட்டியதாக போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர்.  அந்த வரிசையில் சிதம்பரம் அண்ணாமலை  பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறையின் பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும்   மாணவி சுசித்ரா மீது அதே வகுப்பில் பயிலும் மாணவன்  முத்தமிழன்  காதல் பிரச்னையில் ஆசிட் வீசியிருப்பது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:நாகை மாவட்டம் கதிராமங்கலம் நடுவெளி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் செல்வமணி மகள் சுசித்ரா (19). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறையின் பிபிஎஸ் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை விடுதியில் தங்கி வகுப்புகளுக்கு சென்று வந்தார். இதே பல்கலைக்கழகத்தில் குத்தாளம் தாலுகா பழைய கூடலூர் புதுத்தெரு காலனி பகுதியை சேர்ந்த சங்கர் மகன் முத்தமிழன் (22) என்பவரும் அதே உடற்கல்வி துறையில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சுசித்ரா வேறொருவருடன் தொலைபேசியில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை உடற்கல்வித்துறையில் பயிற்சி வகுப்புகள் முடிந்து சுசித்ரா, முத்தமிழன் ஆகிய இருவரும் பல்கலைக்கழக வளாகத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முத்தமிழன், சுசித்ராவிடம் வேறொருவருடன் பேசி வருவது தொடர்பாக கேட்டுள்ளார். இதற்கு சுசித்ரா இனி உன்னை காதலிக்க போவதில்லை எனக் கூறி செருப்பை தூக்கி காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்தமிழன் உடனடியாக அங்கிருந்து ஓடிச் சென்று கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை வாங்கி வந்து, சுசித்ரா மீது வீசியுள்ளார். இதில் நாக்கு, உதடு ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆசிட் வீச்சு சம்பவத்தை பார்த்ததும், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு முத்தமிழனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அவரும் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அண்ணாமலைநகர் போலீசார், மாணவர் முத்தமிழனை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : college student ,
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது