பொன்னேரி, செப். 10: தமிழகத்தில் தூத்துக்குடி, நாகப்பட்டினம், பொன்னேரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் ஒரு கல்லூரி என மொத்தம் 4 மீன்வளக் கல்லூரிகள் உள்ளன. தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு வரை உள்ளது. இந்தக் கல்லூரிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. மீன்வளக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ‘கட்ஆப்’ மதிப்பெண் 195 ஆக உள்ளது. 4 கல்லூரிகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளை முடித்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேறுகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுயநிதி கல்லூரிக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்வளக்கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொன்னேரி மீன்வளக்கல்லூரி மாணவ, மாணவிகள் 525 பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் புதியதாக தனியார் சுயநிதி மீன்வளக் கல்லூரி தொடங்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் 11 பேர் மீதான நடவடிக்கையை திரும்பபெற்று மீண்டும் அவர்களை கல்லூரியில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.