×

திருமுல்லைவாயலில் சாலையில் கட்டுமான பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை

திருவள்ளூர், செப். 10: சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கொட்டி வைத்து விற்கப்படும் மணல், ஜல்லி மற்றும் கட்டுமான பொருட்களை அகற்றக்கோரி, திருமுல்லைவாயல்  லேக்வியூ கார்டன் மற்றும் சக்திவேல் நகர் மக்கள் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் நேற்று மனு கொடுத்தனர்.அதன் விவரம் வருமாறு :  திருமுல்லைவாயல் லேக்வியூ கார்டன் மற்றும் சக்திவேல் நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பின் அருகில் பச்சையம்மன் கோயிலுக்கு  சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் கட்டுமான பொருட்களான செங்கல், ஜல்லி, மணல் ஆகியவற்றை கொட்டிவைத்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த கட்டுமான பொருட்களை கொட்டுவதற்காக கனரக வாகனங்கள் அடிக்கடி வருவதால், சிமென்ட் சாலையானது முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும்,  சிறுவர்கள் தெருவில் விளையாடும்போது விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.கட்டுமான பொருட்களை கொட்டும்போது ஏற்படும் காற்று மாசுவால், பலருக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல், தோல் வியாதிகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.  எனவே, பொதுமக்களுக்கும்,  போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில், கொட்டி வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அகற்றவும், இனி இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags : vendors ,road ,Tirumalavaiyaval ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி