பொன்னேரி, செப். 10: பொன்னேரி அருகே மெதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் சாலையோரத்தில் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக பாரதி நகர் சாலையோரத்தில் கொட்டகை அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வருகிறோம். தற்போது அந்த சாலை விரிவாக்கப்பணி நடக்கிறது. அதற்காக வீடுகளை காலி செய்ய வருவாய்த்துறை உத்தரவிட்டது. மேலும் எங்களுக்கு அதே பகுதியில் மாற்று இடத்துக்கான வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை வேறு சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
எனவே, அங்கிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும், இது தொடர்பான கோரிக்கை மனுவை பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமாரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தரர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.