திருக்கழுக்குன்றம், செப். 10: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அடங்கிய கல்பாக்கம் நகரியத்தில், அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ தனபால் கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், முன்னாள் எம்எல்ஏ தனபால் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் புதுப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள விட்டிலாபுரம், வாயலூர், ஆயப்பாக்கம், நல்லாத்தூர், வசுவசமுத்திரம் உள்பட பல்வேறு ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால் அவசர சிகிச்சைக்கு இப்பகுதியில் அவர மருத்துமனை இல்லாததால் உயிர் பலி அதிகரிக்கின்றன. கல்பாக்கம் நகரியத்தில் உள்ள அணுசக்தி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு கூட சுற்றுப்புற கிராம மக்களை அனுமதிப்பது கிடையாது. அதனால், விபத்தில் சிக்குபவர்கள், சிகிச்சை பெற பெரும் சிரமம் அடைகின்றனர்.இப்பகுதியில் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கும், மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கான செலவினங்களை கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் வழங்க தயாராக உள்ளது. ஆனால், மருத்துவர்களை நியமித்து பராமரிப்பதை மட்டும் தமிழக அரசு எடுத்து செயல்படுத்த வேண்டும் என அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அறிகிறேன்.எனவே மக்களின் நலன் கருதி வளர்ந்து வரும் புதுப்பட்டினம் நகரில் விபத்து சிகிச்சை பிரிவுடன் கூடிய ஒரு மருத்துவமனை அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.