×

குலசேகரன்பட்டினம் - தீதத்தாபுரம் சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

உடன்குடி,ஆக.22: குலசேகரன்பட்டினம்-தீதத்தாபுரம் சாலையை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் தீதத்தாபுரம் வழியாக குலசேகரன்பட்டினம் செல்லும் புறவழிச்சாலை முக்கிய சாலையாகும். குலசேகரன்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் மற்றும் இருசக்கர, 4சக்கர வாகனத்தில் செல்லும் பக்தர்கள் இவ்வழியாகதான் அதிகமாக செல்வார்கள். பலலட்சம் பக்தர்கள் வருகை தரும் தசரா திருநாளில் இந்த சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். இப்படிபட்ட தீதத்தாபுரம் சாலை தற்போது குண்டும் குழியுமாக மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. நடந்து செல்லும் பக்தர்களின் பாதங்களை சாலையின் கற்கள் காயப்படுத்துகின்றன. இருசக்கர, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் போது வாகன டயர்கள் பஞ்சராகிறது. மேலும் சாலையின் இறுபுறமும் உடை மரங்கள் வளர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகளை காயப்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணத்திற்கு பயன்படாத பல்லாங்குழி சாலையை சீரமைக்க வேண்டும், சாலையோரங்களில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்