×

கட்சி நிர்வாகிகள் சேர்மன் பதவி கேட்டு போர்க்கொடி

புதுச்சேரி, ஆக. 21:  காங்கிரஸ் கட்சியினருக்கு வாரியத்தலைவர் பதவி வழங்க கோரி, கட்சி நிர்வாகிகள் முகுல்வாஸ்னிக் முன்னிலையில் அமைச்சருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி வைரவிழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக், காங்கிரஸ் கட்சி தேசிய  செயலாளர் சஞ்சய் தத், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தட்டாஞ்சாவடி ராஜிவ்காந்தி சிக்னல்  அருகிலுள்ள ஒரு தனியார் ஓட்டலில் முதல்வர், அமைச்சர்களை முகுல் வாஸ்னிக்  சந்தித்து பேசினார். அவரை  சந்திப்பதற்காக  கட்சி நிர்வாகிகள் ஓட்டல் வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால்  அமைச்சர்களுடன் அவர் பேசிக்கொண்டே இருந்ததால், பொறுமை இழந்த கட்சி  நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ஓட்டலுக்குள் திடீரென புகுந்தனர்.  காங்கிரஸ் கட்சியினருக்கு வாரியத் தலைவர் பதவி  வழங்கப்படும் என கொடுத்த வாக்குறுதியை இன்னமும் நிறைவேற்றாதது ஏன்? இதுவரை  வாரியத் தலைவரை நியமிக்க முதல்வர், அமைச்சர்கள் ஏன் நடவடிக்கை  எடுக்கவில்லை? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
 அப்போது அங்கிருந்த  அமைச்சர் கந்தசாமிக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கடுமையான  வாக்குவாதம் ஏற்பட்டது. தீப்பாய்ந்தான் எம்எல்ஏவுக்கு வாரிய தலைவர் பதவியை  மாற்றுவதற்கு கோப்புகள் அனுப்பியும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என  அமைச்சர் தெரிவித்தார். மாநில தேர்தல் ஆணையரை மட்டும் ஒரே நாளில் நிரப்பும்போது, ஏன் உங்களால் இதை  செய்ய முடியவில்லை. இதை செய்வதற்கு உங்களுக்கு மனமில்லையா, கட்சிக்காரர்களை  ஏன் ஏமாற்றுகிறீர்கள்? என அமைச்சர்களிடம் கட்சி நிர்வாகிகள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முகுல் வாஸ்னிக்கிடம், வாரியத்தலைவர்  பட்டியல் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளதே, ஏன் அனுமதி அளிக்கவில்லை? எனவும்  கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.   அதற்கு அவர் என்னிடம் எந்த பட்டியலும்  வரவில்லை. எங்கே இருக்கிறது அந்த பட்டியல் என எதிர்கேள்வி எழுப்பவே  காங்கிரஸ் நிர்வாகிகள்  அதிர்ச்சிடைந்தனர். அப்போது  நீங்கள் மட்டும் எம்எல்ஏ ஆகி அமைச்சர்கள்  ஆகி விடுகிறீர்கள். கட்சிக்காக பணியாற்றிய எங்களுக்கு வாரியத் தலைவர்  பதவியை வழங்க யாரும் தயாராக இல்லை என தொடர்ந்து ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.  இதனால் கடும் வாக்குவாதம், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. நிலைமையை புரிந்து கொண்ட முகுல்வாஸ்னிக், அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்தார். கட்சியினருக்கு உரிய மரியாதையளித்தால்தான், வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடியும். நிறைய பேர் சேர்மன் பதவி கேட்டாலும், யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொடுங்கள். ஆனால் இதனை காரணம் காட்டி தட்டிக்கழிக்க கூடாது என  கூறினர். இதையடுத்து  முதல்வரையும், கட்சி தலைவர் நமச்சிவாயத்தையும் அழைத்து உடனடியாக  இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முகுல் வாஸ்னிக் அறிவுறுத்தினார்.  

 முதல்வர், அமைச்சர்கள் முன்னிலையிலே காங்கிரஸ் நிர்வாகிகள் அரசு மீது  சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால் முகுல்வாஸ்னிக் அதிர்ச்சி  அடைந்தார். அமைச்சர்களும் பதிலளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் மவுனமாகி  விட்டனர். வாரியத் தலைவர் விவகாரத்தில் கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு  தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதால் விரைவில் வாரியத் தலைவர் பதவிகளை  நிரப்புவதற்கான வேலைகளில் அரசு ஈடுபட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...