புதுச்சேரி, ஆக. 14: புதுச்சேரி, காலாப்பட்டு, மாத்தூர் சாலையில் மாத்திரை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும், 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களும் வேலை செய்கின்றனர். இங்கு தனியார் ஏஜென்சி மூலம் புதிதாக ஆட்கள் வேலைக்கு வைக்கப்படுவதை கண்டித்து பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை முன்பு நேற்று முன்தினம் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். விரைந்து வந்த காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் போராட்டம் நடத்தியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக கூறியதால் மறியலை கைவிட்டனர். இந்த நிலையில் மாவட்ட தொழிலாளர் துறையானது சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வலியுறுத்தி நேற்று வழுதாவூர் ரோட்டில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், தமிழக வாழ்வுரிமை கட்சி தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் தொழிலாளர் துறை இயக்குனர் வல்லவனை சந்தித்து முறையிட்டனர்.
அப்போது ஏஜென்சி மூலம் கம்பெனியில் ஆட்கள் வைப்பதை தடுத்து நிறுத்தி ஏற்கனவே பணியில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். உடனடியாக அங்கு தொழிலாளர்களுக்கான தேர்தலை நடத்த வேண்டும். இவற்றை செய்ய அதிகாரிகள் தவறும் பட்சத்தில் அங்கு பெரியளவில் போராட்டம் வெடிக்கும் தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டறிந்த அதிகாரி, விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.