×

வரத்துகால்வாயில் கான்கிரீட் கழிவுகள் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் உடனே தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

மானாமதுரை, ஜூலை 16: மானாமதுரை சிப்காட் பெரியகண்மாய் வரத்துகால்வாயில் கான்கிரீட் கழிவுகள் கழிவுகள் கொட்டப்படுவதால் கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மானாமதுரை சிவகங்கை மெயின்ரோட்டில் சிப்காட் தாலுகா அலுவலகத்தின் அருகில் உள்ளது சிப்காட் பெரியகண்மாய். இந்த கண்மாய் 40 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இந்த கண்மாய்க்கு சிப்காட் தொழிற்பேட்டையை ஒட்டியுள்ள அம்மன்நகர், பாரதிநகர் மேற்கு, நவுத்தாவு கிராமத்தின் மேற்குபகுதிகளில் பெய்யும் மழைநீர் வரும்.மேலும் தயாபுரம் ரயில்வேகேட் அருகே உள்ள சின்னக்கண்மாய் பகுதியில் இருந்து வரும் நீரும் கண்மாய்க்கு வந்து சேரும். பத்தாண்டுகளுக்கு முன் இந்த கண்மாயின் நீர் தேங்கும் அளவு பதினைந்து அடிக்கு மேல் இருந்தது. இவ்வாறு தண்ணீர் அதிகம் தேங்கும் இந்த கண்மாயினை கடந்த எட்டு ஆண்டுகளாக பராமரிக்காமல் கைவிட்டதால் கண்மாயினுள் கான்கிரீட் கழிவுகள், ரசாயனகழிவுகள், கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன, கருவேலமரங்கள் வளர்ந்து வரத்துக்கால்வாய்கள் அடைபட்டுள்ளன. இதனால் தண்ணீர் தேங்கவில்லை. இந்த கண்மாயை நம்பியிருந்த இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த நான்கு ஆண்டுளாக தங்களது நிலங்களை தரிசாக போட்டு வைத்துள்ளனர்.

சில விவசாயிகள் மழைநீர் வரும் வழிகள் அடைக்கப்பட்டதால் இனி விவசாயம் செய்வதை அடியோடு கைவிட்டு நிலங்களை அடிமாட்டு விலைக்கு ரியல்எஸ்டேட் தொழில்செய்பவர்களிடம் விற்றுவிட்டு சென்றுவிட்டனர். இவ்வாறு தண்ணீர் வரத்துகால்வாய்கள் அடைக்கப்பட்டதால் வறண்டு காணப்படும் கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் தர்மா கூறுகையில், மானாமதுரை சிப்காட் தயாபுரம் எதிரே உள்ள பெரிய கண்மாயில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் கண்மாய் நிரம்பி மாறுகால் செல்கிற அளவுக்கு நீர்வரத்து இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு கூட தேங்கிய தண்ணீரில் 40 வயதுடையவர் நீந்த முடியாமல் மூச்சுத்திணறி இறந்தார். அகலப்பாதை பணிக்காக இந்த கண்மாயில் விதிகளை மீறி அதிகளவு கிராவல் மண் எடுக்கப்பட்டது.

விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டதுடன் கண்மாயை பராமரிக்க வேண்டிய அரசும், மாவட்ட நிர்வாகமும் அலட்சியம் செய்தன. மழைநீர் வரும் வழிகள் அடைக்கப்பட்டதால் இனி விவசாயம் செய்வதை அடியோடு கைவிட்டு நிலங்களை அடிமாட்டு விலைக்கு ரியல்எஸ்டேட் தொழில்செய்பவர்களிடம் விற்றுவிட்டு சென்றுவிட்டனர். இருக்கிற விவசாயிகளும் தங்களது நிலங்களை தரிசாக போட்டு வைத்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் சிப்காட் பெரியகண்மாயை தூர்வாரி மழைநீர் வடிகால்களில் தண்ணீர் வரத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்