கிருஷ்ணகிரி, ஜூன் 25: கிருஷ்ணகிரியில், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி ஒன்றியம், பையனப்பள்ளி எம்ஜிஆர் நகரில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதன் மின்மோட்டார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழுதாகி விட்டது. பின்னர், அந்த மின்மோட்டாரையே சரிசெய்து மீண்டும் இணைப்பு கொடுத்தனர். ஆனால், மின்மோட்டார் வேலை செய்யாததால், கடந்த 6 மாதங்களாக டிராக்டர் மூலம் வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்து வந்தனர். ஆனால், இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. இதையடுத்து, சீரான குடிநீர் வழங்ககோரி, பெண்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் பிரபாகர், அதிகாரிகளை அந்த கிராமத்திற்கு அனுப்பி, குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கான வழியை பார்வையிட்டு, அதனை அறிக்கையாக வழங்க உத்தரவிட்டார். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கடந்த 6 மாதங்களாக போதுமான குடிநீர் இல்லாமல், பெரும் அவதிப்பட்டு வருகிறோம். குடிநீர் பிரச்னையால், தினமும் சரியான நேரத்திற்கு கூலி வேலைக்கு செல்ல முடிவதில்லை. குழந்தைகளையும் சரியான நேரத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்ப முடியவில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து, சுமார் அரை கி.மீ தொலைவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. அங்குள்ள கேட் வால்வை திறந்து விட்டால், எங்கள் குடிநீர் பிரச்னையை கொஞ்சம் தீர்த்துகொள்ள முடியும். ஆனால், அதையும் திறக்க மறுக்கின்றனர். எனவே, குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.