×

அரசின் இருசக்கர வாகனம் பெற 4ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

நாகை, ஜூன் 25: அம்மா திட்டத்தின் கீழ் இரண்டு சக்கர வாகனம் பெற வரும் 4ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் இலவச அம்மா இரு சக்கர வாகனம் வாங்க மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியமாக ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீதம் கூடுதலாக மானியம் வழங்கப்படும். இதற்கான பயனாளிகள் அமைப்பு சார்ந்த, சாராத நலவாரியத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணிபுரியும் மகளிர், சுயதொழில்புரிவோர், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுதிட்டங்களில் பணிபுரியும் பெண்கள், ஊராட்சி குழு கூட்டமைப்பு உறுப்பினர், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், மக்கள் கற்றல் மையங்களில் பணிபுரிவோர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளில் உள்ள மகளிர் மட்டும் விண்ணப்பிக்க தகுதிபடைத்தவர்கள்.

 பயனாளிகள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப தலைவியாக உள்ள மகளிர் ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி, திருமணமாகாத 35 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பத்தை அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 4ம் தேதிக்குள் வழங்க வேண்டும். விண்ணப்பத்துடன் பிறந்த தேதி, இருப்பிடம், வருமானம், ஜாதி, பணிபுரிவதற்கான ஆதாரம் ஆகியவற்றிற்கான சான்று, ஆதார்கார்டு, கல்வித்தகுதிசான்று, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.கலெக்டர் தகவல்

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...