சீர்காழி, ஜூன் 25:சீர்காழி அடுத்த அகணி அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் விரைவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.சீர்காழி அருகே அகணியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு அகணி, நந்தியநல்லூர், நிம்மேலி, ஏனாகுடி, தென்னங்குடி, உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி 2017-2018, 2018 -2019 கல்வி ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாததால் விளையாட்டு போட்டிகள், நடத்தவும், கட்டாய பாடமான உடற்கல்வி பயிற்சிகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கவும், கைப்பந்து, ஹாக்கி, கால்பத்து விளையாட்டுகளை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கவும் வசதி இல்லை. இதனால் மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் பள்ளியில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க இரவு நேர காப்பாளர், அலுவலக உதவியாளர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாணவர்களுக்கு போதுமான அளவு , மேஜை பெஞ்சு போன்ற இருக்கை வசதிகள் செய்து தர வேண்டும்.
இது குறித்து சமூக ஆர்வலர் நந்திய நல்லூர் ராஜேஷ் கூறுகையில்,அகணி அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டு பயிற்சியும் எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. உடனே விளையாட்டு திடல் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பள்ளியில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்க வேண்டும். அப்போதுதான் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த முடியும் என்றார்.