சிவகாசி, ஜூன் 25: சிவகாசி அருகே, பள்ளபட்டியில் அரசு பள்ளி அருகே கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவியரை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். சிவகாசி அருகே, பள்ளபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இக்கிராமத்தில் போதிய வாறுகால் வசதியில்லாததால் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதி அருகே,
மாணவர்கள் சாப்பிடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும், கழிவுநீரில் புழுக்களும் உலா வருவதால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். சுகாதாரக்கேட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். கழிவுநீர் தேக்கம் அருகே சாலையோர கடைகளும் உள்ளது. இந்த கடைகளில் தின்பண்டம் வாங்கி சாப்பிடும் மாணவ மாணவியர் தொற்று நோய் அச்சத்தில் உள்ளனர். எனவே, பள்ளி அருகே உள்ள கழிவுநீர் தேக்கத்தை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.