விருதுநகர், ஜூன் 25: அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம் பகுதி பொதுமக்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, கடந்த 2012ல் மனு அளித்தோம். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கல்லூரணி கிராமத்தில் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு தலா 2 சென்ட் இலவச வீட்டுமனையாக அப்போதைய கலெக்டரால் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இலவச பட்டா நிலத்தில் வீடு கட்டுவதற்காக விஏஓவிடம் சென்று கேட்டோம். அரசாங்கம் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவை பார்த்து விஏஓ செல்லாது; போலியானது என கூறிவிட்டார். கலெக்டர் வழங்கிய பட்டா போலியானது என்றால் எப்படி? மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து அரசு வழங்கிய இலவச பட்டா நிலம் போலியானதா என ஆய்வு செய்து உரிய பட்டா வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர்.