×

அப்பணம்பட்டியில் ரேஷன் கடை அமைக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

விருதுநகர், ஜூன் 25: ரேஷன் கடை அமைக்காவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என வெம்பக்கோட்டை ஒன்றியம், முத்தாண்டியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அப்பணம்பட்டி கிராம மக்கள், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வெம்பக்கோட்டை ஒன்றியம், முத்தாண்டியாபுரம் ஊராட்சியில் அப்பணம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த நாங்கள் ரேசன் பொருட்களை வாங்க முத்தாண்டியாபுரம் சென்று வந்தோம். இருவேறு சமூகத்தினருக்கு முன்பகை இருந்ததால், ரேசன் வாங்க செல்லும்போது ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற கோயில் திருவிழாவில் அப்பணம்பட்டி கிராம மக்களுக்கும், முத்தாண்டியாபுரம் கிராம மக்களுக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.

கோவில் பிரச்னையில் ஏற்பட்ட தகராறால் தற்போது முத்தாண்டியாபுரத்திற்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றால் பிரச்னை மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் வாங்காமல் சிரமத்தில் உள்ளனர். எனவே, அப்பணம்பட்டியில் ரேஷன் கடை திறக்க வேண்டும். ரேஷன் கடை அமைக்காவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம். மேலும் அப்பணம்பட்டி கிராம மக்கள் ரேஷன் கார்டை கலெக்டரிடம் ஒப்படைப்போம். எனவே, மாவட்ட நிர்வாகம் அப்பணம்பட்டியில் ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் தெரிவித்துள்ளனர்.

Tags : Collector ,Apanampatti ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...