×

சிவகங்கை தெப்பக்குளத்திற்கான பெரியாறு கால்வாயை சிமெண்ட் கால்வாயாக அமைக்க வலியுறுத்தல்

சிவகங்கை,  ஜுன் 25: சிவகங்கை தெப்பக்குளத்திற்கான பெரியாறு கால்வாயை சிமெண்ட்  கால்வாயாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை நகரின் மைய பகுதியில் உள்ள சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள  தெப்பக்குளம் 300 ஆண்டுகள் பழமையானது. சிவகங்கை தெப்பக்குளத்தில் பெரியாறு  நீர் நிரப்ப வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து  கடந்த இருபது ஆண்டிற்கு பின் பெரியாறு நீர் கடந்த ஆண்டு ஆகஸ்டில்  நிரப்பப்பட்டது. பெரியாறு கால்வாய் மேலூர் பிரிவில் அனைத்து  கால்வாய்களையும் அடைத்துவிட்டு தெப்பக்குளத்திற்கு மட்டும் நீர் வரும்  வகையில் திறக்கப்பட்டது. ஆனால் இடையமேலூர் உள்பட பல்வேறு இடங்களில்  கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியதால் தெப்பக்குளத்திற்கு நீர்  வருவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் உடைப்பு ஏற்பட்ட இடங்கள் சரி  செய்யப்பட்டு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகில் காஞ்சிரங்கால் பகுதிக்கு  நீர் வந்தது. திருப்பத்தூர் சாலையில் நீர் வந்த போது கால்வாய் மேடாக  இருந்ததால் அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் பாய்ந்தது. இப்பகுதியில்  இருந்து கலெக்டர் அலுவலக பூங்கா மற்றும் ஆர்ச் பகுதியை நீர் கடப்பதில்  பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கால்வாயில் நீர் அதிகமாக வந்தும் தெப்பக்குளம்  வந்து சேர்கையில் மிகக்குறைவான அளவே வந்தது. காஞ்சிரங்கால் வரை  அதிகப்படியாக வரும் நீர் அதே அளவில் தெப்பக்குளத்திற்கும் வந்தால் மிக  விரைவில் குளம் நிறைந்திருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் கால்வாய்களில்  குறைவான அளவில் நீர் வந்ததால் தெப்பக்குளத்தில் நீர் நிரைப்பதில் பாதிப்பு  ஏற்பட்டது. ஏராளமான நீரும் வீணானது.

காஞ்சிரங்கால் வரை சிமெண்ட் கால்வாய்  உள்ள நிலையில் அதன் பிறகு சுமார் 1கி.மீ தூரம் மண் கால்வாயாக  காணப்படுகிறது. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாத நிலையில்  கால்வாய்க்கான அடையாளமே இல்லாமல் இருந்ததால் பெரியாறு நீர் கொண்டு  வருவதற்காக புதிதாக வெட்டப்பட்டது. இக்கால்வாய் தொடர்ந்து  பராமரிப்பில்லாமல் போனால் மண் சரிந்து கால்வாய் மூடப்பட்டுவிடும். எனவே  இந்த கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்ற வேண்டும் என  வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறியதாவது:  ஆண்டுதோறும் தெப்பக்குளத்தில் பெரியாறு நீர் நிரப்ப வேண்டும் என கோரிக்கை  வைக்கும் போது கால்வாய் அமைக்க வேண்டும் என்பதே பெரிய வேலையாக இருக்கும்  என்பதால்
இதில் மாவட்ட நிர்வாகம் அதிக அக்கறை காட்டுவதில்லை. ஆனால் கடந்த  ஆண்டு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி சிமெண்ட் கால்வாய்  அமைத்தால் வவரும் ஆண்டுகளில் பயன் உள்ளதாக இருக்கும். பெரியாறு, நீர்  மட்டுமல்லாது மழை நீரும் குளத்திற்கு செல்ல ஏதுவாக இருக்கும். தற்போது மண்  கால்வாய் சிதைய தொடங்கியுள்ளது. எனவே விரைந்து நிதி ஒதுக்கீடு செய்து  கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : canal ,cement canal ,Sivagangai Theppukulam ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்