×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே குடிநீருக்காக தினமும் திண்டாட்டம் ஊரை காலி செய்யும் மக்கள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 25:  கண்ணாரேந்தல் கிராமத்தில் பல மாதங்களாக சரியாக குடிநீர் வராததால், பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் ஏ.மணக்குடி ஊராட்சியில் உள்ள கிராமங்களான கண்ணாரேந்தல், மொச்சியேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு வருட காலமாக குடி தண்ணீர் சப்ளை சரிவர இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தினமும் அனைத்து வீடுகளிலும் டேங்கர் தண்ணீரையே வாங்கி பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது. குழாய்கள் பதிக்கப்பட்டு காட்சி பொருளாகவே உள்ளது. ஏதோ இருக்கும் ஒரு அடி பம்பில் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த பகுதியில் சுமார் கடந்த நான்கு ஆண்டுகளாக சரியான மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஆழப் பகுதிக்கு சென்று விட்டது. இதனால் வீடுகளில் கண்மாய், குளங்களில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளிலும் தண்ணீர் ஊற்று நின்று விட்டது. இதனால் மக்கள் தினமும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.100ல் இருந்து ரூ.250 வரை விலைகொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ‘இப்பகுதியை சேர்ந்த சசிக்குமார் கூறுகையில், எங்கள் கிராமங்களில் வசதியற்ற ஏழை, எளிய மக்கள் தான் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

காரணம் 4 வருடங்களாக விவசாயம் விளையாமல் போனதால் சாப்பாட்டிற்கே அரிசி மற்றும் மளிகைச் சாமான்கள், காய்கறி போன்றவை வாங்கவே மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். இதில் குடி தண்ணீரும் பணம் கொடுத்து வாங்கிதான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் உள்ளவர்கள் தண்ணீர் பஞ்சம் காரணமாக வேறு ஊறுகளுக்கு சென்று குடியேறி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் கிராமமே காலியாகிவிடும் நிலை வந்துவிடும். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து இந்த கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்றார்.

Tags : town ,RS Mangalam ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி