×

பூட்டி கிடக்கும் செக்போஸ்ட் தடை பொருட்கள் கடத்தல் ஜோர்

சாயல்குடி, ஜூன் 25:  சாயல்குடி அருகே ஒப்பிலான் விலக்கு ரோட்டில் உள்ள கடலோர காவல்படைக்கு சொந்தமான செக்போஸ்ட் பூட்டியே கிடப்பதால் கடத்தல் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். சாயல்குடி அருகே ரோச்மா நகர் கடல் முதல் வாலிநோக்கம், சின்ன ஏர்வாடி கடல் வரையிலான சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாயல்குடி கடல் எல்கை கடற்கரை உள்ளது. இதனையொட்டி சுமார் 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 3000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடற்கரைக்கு மிக அருகில் குடியிருப்பு வீடுகள் இருப்பதால், மண் அரிமானம் மற்றும் கடற்கரை மண் தடுத்தல், காற்றிற்கு மண் பறக்காமல் தடுத்தல், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தை தடுக்கும் நோக்கத்திலும், பாதுகாப்பு நலனுக்காவும், இயற்கையை பாதுகாக்கவும், இப்பகுதியில் தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள பாதுகாப்பு மையம் சார்பில் மரங்கள் நடப்பட்டுள்ளது.

கடற்கரை ஓரங்களில் மணல் பரப்பில் வறட்சியை தாங்க கூடிய வகை மரங்கள், உப்புகாற்றிற்கு பாதிப்படையாத மரங்களான சவுக்கு, ஆர்.எஸ்.பதி, நாட்டு கருவேலமரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. சுமார் 20 வருடங்களுக்கு முன் வளர்க்கப்பட்ட நாட்டு கருவேலமரங்களும் உள்ளன.
ஆனால்  மரங்கள் தொடர் வறட்சிக்கு தாக்கு பிடிக்க முடியாமல், பட்டுபோய் சாய்ந்து கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி கடத்தி வருவதாக அப்பகுதி கிராமமக்கள் கூறுகின்றனர். மேலும் மன்னார் வளைகுடா உயிர்கோளம் எனப்படும் இப்பகுதி கடலில் 7 குட்டி தீவுகள்,  104 வகை பவள திட்டுகள், 13 வகை கடல்புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் வசிக்கின்றன.

பாலூட்டி இனங்களான ஆவுளியா, டால்பின்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையிலான மீன்களும் வசிக்கின்றன. வாலிநோக்கம் போன்ற கடற்கரையில் சிலிகான், தாது மணல் திட்டு அதிகமாக உள்ளது. இதுபோன்ற அரியவகை உயிரினங்களும், விலை மதிப்புமிக்க இயற்கையான பொருட்கள் அதிகம் உள்ளது. ஆனால் கடற்கரையில் போதிய பாதுகாப்பு அம்சம்  இல்லாததால் அரியவகை உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இப்பகுதியில் கஞ்சா, பீடி சுருள், தடைசெய்யப்பட்ட புகையிலை போன்ற போதை வஸ்துகள், கடல் அட்டை, கடல் சங்கு போன்றவற்றை சமூக விரோத கும்பல் கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

ரோந்து பணி இல்லை
சமூக ஆர்வலர் கந்தசாமி கூறும்போது, சாயல்குடி ஒப்பிலான் முதல் வாலிநோக்கம் கடற்கரையோரங்களின் அரியவகை உயிரினங்கள், வனத்துறை காடுகளை பாதுக்காக்கவும் ஒப்பிலான் விலக்கு ரோட்டில் 2015ம் ஆண்டு கடலோர காவல் படை செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. ஆனால் காவலர்கள் இன்றி செக்போஸ்ட் பூட்டி கிடக்கிறது. சாலையின் குறுக்கே வாகன சோதனை தடுப்பு கம்பியும் காணாமல் போய் விட்டது. இதனால் கடற்கரை கிராமங்களின் பாதுகாப்பிற்காக வனத்துறையால் வளர்க்கப்பட்ட மரங்கள் போதிய பாதுகாப்பு இன்றி கிடப்பதால், சிலர் கூலி ஆட்களை கொண்டு, மரங்களை ஆங்காங்கே வெட்டி, இரவு நேரங்களில் வண்டிகளில் ஏற்றி கடத்தி செல்கின்றனர், வனத்துறை அலுவலர்கள், வனக்காப்பாளர்கள் முறையாக மரங்களை பாதுகாப்பது கிடையாது.

ரோந்து பணி செல்வதும் கிடையாது. இதனால் மரம் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது. மேலும் கஞ்சா, பீடி சுருள், தடை செய்யப்பட்ட புகையிலை போன்ற போதை வஸ்துகள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்படுவதாக தகவல் உள்ளது. கடல் அட்டை, கடல் சங்கு போன்றவையும் கடத்தப்படுகிறது. மேலும் மன்னார் வளைகுடா உயிர்கோள அரியவகை உயிரினங்கள், தாது மணல் போன்றவற்றிற்கு போதிய பாதுகாப்பு இல்லை. கடற்கரை கிராம மக்களின் பாதுகாப்பிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது, எனவே கடலோர பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும். செக்போஸ்ட் மீண்டும் பயன்பாட்டிற்கு வர கடலோர காவல்படை உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை