கொடைக்கானல், ஜூன் 25: கொடைக்கானல் நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. நகர செயலாளர் முகமது இப்ராகிம் தலைமை வகிக்க, மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, கீழ்மலை ஒன்றிய செயலாளர் கருமலை பாண்டி முன்னிலை வகித்தனர். கொடைக்கானல் நாயுடுபுரம், அண்ணாசாலை கேசிஎஸ் திடல், மூஞ்சிக்கல், அண்ணாநகர் ஆகிய இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாய கண்ணன், நகர அவைத்தலைவர் ஜெயந்தன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் செல்லத்துரை, நிர்வாகிகள் அப்பாஸ், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, அதிமுக ஆட்சியின் அவலநிலை பற்றியும், தமிழகம் தண்ணீருக்கு தவிப்பது பற்றியும் பேசினார்.