காங்கயம், ஜூன் 25: காங்கயத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 2,571 மனுக்கள் பெறபட்டதில் 173 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம் தாலூக்காவில் கலெக்டர் பழனிசாமி தலைமையில் ஜமாபந்தி கடந்த 13ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், வாரிசு சான்று, விதவைசான்று உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மொத்தம் 2571 மனுக்கள் பெறப்பட்டது. அப்போது காங்கயம் தாசில்தார் விவேகானந்தன், துணை வட்டாட்சியர்கள் மோகனன், செந்தில்நாதன், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். உடனடியாக தீர்வு காணப்படும் மனுக்கள் மட்டும் கண்டறியப்பட்டு அதற்கு மட்டும் தீர்வு காணப்பட்டது.
இதனால் உடனடியாக 173 மனுக்கு தீர்வு காணப்பட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்களுக்கு பொது மக்களை அலை கழிக்காமல் உடனடியாக தீர்வு காண மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ஜமாபந்தியில் மனு அளித்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.