×

நிலத்தடி நீர் திருடிய தனியார் குடிநீர் லாரிகள் சிறைபிடிப்பு: பூந்தமல்லியில் பரபரப்பு

பூந்தமல்லி, ஜூன் 25: பூந்தமல்லி அருகே இரவு நேரங்களில் தண்ணீர் திருட்டு நடந்து வருகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள்,  பாரிவாக்கம் அருகே தண்ணீர் ஏற்றி சென்ற தனியார் டேங்கர் லாரிகளை சிறைபிடித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாமல் போனதால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. மேலும் கோடையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நிலத்தடிநீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. பெரும்பாலான மக்கள், டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை நம்பியிருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

இதனால் டேங்கர் லாரி வைத்திருப்பவர்கள், எந்த இடத்தில் தண்ணீர் கிடைத்தாலும் அதனை எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம், பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல் ஆகிய பகுதிகளில் தனியார் நிலங்களில் அதிக ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில்  தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள், பாரிவாக்கம் அருகே நேற்று முன்தினம் இரவு தண்ணீர் ஏற்றி சென்ற டேங்கர் லாரிகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 60 அடியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்ட இடத்தில்,

தற்போது 300 அடி முதல் 600 அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் வேண்டுமென்றால் மக்களின் தாகம் தீர்க்க இங்கிருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்லலாம். ஆனால் இங்கு முழுக்க, முழுக்க வியாபாரம் நோக்கத்தோடு தனியார் தண்ணீர் லாரி வைத்திருப்பவர்கள், நாளொன்றுக்கு 500 முதல் 700 லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்’’ என்றனர். இதைத் தொடர்ந்து தற்காலிகமாக அந்த பகுதிகளில் லாரிகளில் தண்ணீர் எடுக்க போலீசார் தடை விதித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Groundwater Stealing Private ,Poonthalli ,
× RELATED 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி...