வால்பாறை, ஜூன் 25: வால்பாறையை அடுத்து வில்லோனி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளது வில்லோனி எஸ்டேட். தேயிலை மற்றும் காபி பயிரிடப்பட்டுள்ள அப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளும், அவ்வப்போது யானைகளின் நடமாட்டமும் இருப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த 13ம் தேதி தேயிலை தொழிற்சாலை பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் காட்டெருமை இறந்து கிடந்தது. தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர், சிறுத்தை தாக்கியதில் காட்டெருமை உயிர் இழந்துள்ளது என கூறினர். வனத்துறையினர் அப்பகுதியில் 2 கேமராக்கள் பொருத்தினர். இந்நிலையில், காட்டெருமையை சாப்பிட 14 மற்றும் 15ம் தேதி இரவு 2 நாட்கள் புலி வந்து காட்டெருமை உடலை சாப்பிட்டது கேமராவில் பதிவாகி உள்ளது. புலி நடமாட்டம் உள்ளதால் வில்லோனி எஸ்டேட் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் வெளியான புலியின் படம், மற்றும் தலநார் எஸ்டேட் பகுதியில் நடமாடிய புலியின் படமும் ஒரே மாதிரி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனா்.