×

மின்கம்பங்களில் தொங்கும் மரக்கட்டைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்

ஆலந்தூர், ஜூன் 25: உள்ளகரம் - மேடவாக்கம் சாலையில் உள்ள மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்கள் சார்பில் கட்டப்படும் விளம்பர பேனர்கள் உடைந்து, மரக்கட்டைகளை ஆபத்தான முறையில் தொங்குகிறது. அதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். உள்ளகரம் - மேடவாக்கம்  சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் செல்வதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதில், ஆலந்தூர் சாலையில்  100க்கும் மேற்பட்ட  மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், வியாபார நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்களது விளம்பர தட்டிகள் மற்றும் பேனர்களை இரவோடு இரவாக கட்டி  தொங்க விடுகின்றனர்.

இதற்காக மின் வாரியத்திடமோ, மாநகராட்சியிடமோ எவ்வித அனுமதியும், கட்டணமும் செலுத்துவதில்லை. இதுபோல், கட்டப்படும் பேனர்களை அதிகாரிகள் உடனுக்குடன் அகற்றாததால், காற்றில் கிழிந்து தொங்குகின்றன. மேலும், பஸ், லாரி போன்ற வாகனங்களில் உரசி உடைந்து ஆபத்தான நிலையில் மரக்கட்டைகள் தொங்குகின்றன. இவை, வாகன ஓட்டிகள் மீது விழும் நிலை உள்ளதால், பீதியுடன் செல்கின்றனர்.  எனவே, மின் கம்பங்களில் தொங்கும் இந்த மரக்கட்டைகளை   உடனடியாக அகற்றவும், அனுமதியின்றி விளம்பர பேனர்களை வைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Accidents ,motorists ,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி