×

திம்பம் மலைப்பாதையில் கட்டணம் வசூல் போராட்டம் நடத்த மக்கள் முடிவு

ஈரோடு, ஜூன் 25:  திம்பம் மலைப்பாதையில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்சத்தியமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ., சுப்பு மற்றும் திமுக நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல நுழைவு கட்டணம் விதிப்பதும், எடை அளவு காண்பதும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இலகு ரக வாகனங்கள் செல்ல நேர கட்டுப்பாடு விதிப்பது கண்டனத்துக்குரியது. பண்ணாரியில் வனத்துறை, போலீஸ் துறை என இரு சோதனை சாவடிகளால் தாமதம் ஏற்படுகிறது. ஒரே சாவடியாக மாற்ற வேண்டும். நேரக்கட்டுப்பாடு மற்றும் கட்டண விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வாகனங்களில் செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  நுழைவு கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து வரும் 1ம் தேதி காலை 10 மணிக்கு பண்ணாரியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் பொதுமக்கள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுப்பு கூறினார்.

Tags : Timbuktu ,
× RELATED துன்பம் தரும் திம்பம் மலைப்பாதை...