பெருந்துறை, ஜூன் 25: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு ரூ.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை நேற்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பெருந்துறை எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம் குத்துவிளக்கு ஏற்றி அதனை மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். பெருந்துறையில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதலாக ஆய்வகம், கருத்தரங்கு கூடம், தங்கும் விடுதி, பணிமனை, அமைப்பியல் ஆய்வு கூடம், கழிப்பறை, லிப்ட் வசதி உட்பட பல்வேறு வசதிகள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு நேற்று வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பெருந்துறை எம்.எல்.ஏ., தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசுகையில், ‘‘சட்டமன்றத்தில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று பெருந்துறையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க உடனடியாக ரூ. 38 கோடி நிதி ஒதுக்கி தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரியை கட்டி திறந்து வைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனியார் கல்லூரிகளை மிஞ்சும் வகையில் ரூ.11 கோடி செலவில் அதி நவீன கட்டிட வசதிகளை செய்து கொடுத்துள்ளார்,’’ என்றார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வரதகுரு(பொறுப்பு), துணை முதல்வர் லோகநாதன், வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க துணை தலைவர் ஜெகதீஸ், பெருந்துறை ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பெரியசாமி, நகர செயலாளர் பழனிச்சாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.