×

உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகள், போலீசாரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து போராட்டம் நெமிலி அருகே பரபரப்பு

அரக்கோணம்: நெமிலி அருகே உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரி மற்றும் போலீசாரை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், நெமிலி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் காவேரிபுரம் ஆற்றங்கரையில் ₹45.85 லட்சம் மதிப்பில் மக்கும், மக்காத குப்பை தரம்பிரிக்கும் உரக்கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரக்கிடங்கு அமையவுள்ள இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பணி கைவிடப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே 2 முறை சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் நெமிலி தாசில்தார் சதீஷ், பேரூராட்சி செயலாளர் பழனிகுமார், டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், அமுதா, லட்சுமிபதி மற்றும் கட்டிட பணியாளர்கள் நேற்று காலை காவேரிபுரம் பகுதிக்கு சென்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று அதிகாரிகளையும், போலீசாரையும் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘எங்கள் பகுதியில் உரகிடங்கு அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். சுகாதார சீர்கேடு ஏற்படும். ஒதுக்குபுறமான பகுதியில் உரகிடங்கு அமைத்துக்கொள்ளுங்கள்'' என்றனர்.

அவர்களிடம், போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேரூராட்சி செயலாளர் பழனிகுமார், ‘இது அரசாங்கத்தின் திட்டம். இதனால் பொதுமக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. எனவே, இத்திட்டத்திற்கு அனுமதி அளியுங்கள் என்றார். இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ள மக்கள் மறுத்தனர். பின்னர், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் சமாதான கூட்டம் நடத்தி அதனடிப்படையில் எடுக்கும் முடிவுகளை கலெக்டருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, உரக்கிடங்கு அமைக்கும் பணிகளை மேற்கொள்ளாமல் அதிகாரிகள், ஊழியர்கள் பாதியிலேயே திரும்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest officers ,town ,
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது