×

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் தேங்காய் பொறுக்க கட்டிப்புரண்ட பெண்கள்

மேச்சேரி, ஜூன் 21: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில், தேங்காய் பொறுக்குவதில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதில் பெண் ஊழியர் காயமடைந்தார். இதுதொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநில பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

இந்த கோயில், துப்புரவு பணியில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று  மதியம், கோயில் முன்பு ஊழியர் பாப்பாத்தி(60) சுத்தம் செய்யும் பணியில்  ஈடுபட்டிருந்தார். அப்போது தரிசனத்துக்கு வந்த பக்தர் ஒருவர், நேர்த்திக்கடனை செலுத்த தேங்காய்  உடைத்தார். அந்த தேங்காயை பொறுக்குவதில் கோயில் வளாகத்தில் கடை வைத்திருக்கும் மலர்(38), சின்னப்பிள்ளை (50),  சத்யா (26), கார்த்திகா(21) மற்றும் ஊழியர் பாப்பாத்தி ஆகிய ஐந்து  பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், ஒரு கட்டத்தில் பாப்பாத்தியை சரமாரியாக தாக்கி, கீழே தள்ளி கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதில் படுகாயமடைந்த பாப்பாத்தியை, சக ஊழியர்கள் மீட்டு மேட்டூர்  அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், மேச்சேரி போலீசார் பெண் வியாபாரிகள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Women ,Mecheri Pathrakaliamman ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது