பரமத்திவேலூர், ஜூன் 21: பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பரமத்தி-திருச்செங்கோடு சாலையில் ₹8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தின் திறப்பு விழா நடந்தது. பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜூ(எ) ராமசாமி தலைமை வகித்தார்.
வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள்(நாமக்கல்) சரவணன், (பரமத்திவேலூர்) நித்யா முன்னிலை வகித்தனர். செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி, மண்டபத்தை திறந்து வைத்தார். மண்டப அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் திறந்து வைத்தார். உணவு கூடங்களை மூர்த்தி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மணி ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தனராஜ், முன்னாள் தலைவர் நல்லதம்பி, எல்பிஜி மற்றும் ரிக் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பிள்ளைகளத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தனபால், ராகா தமிழ்மணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தினர். சங்க இணைச் செயலாளர் வாசு நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை உபதலைவர் சக்திவேல், பொருளாளர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.