×

சங்கரன்கோவிலில் பட்டப்பகலில் பயங்கரம் வீடுபுகுந்து பெண் குத்தி கொலை

சங்கரன்கோவில், ஜூன் 21:  சங்கரன்கோவிலில் வீட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் காமராஜர் நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர்  கோமதிநாயகம். கொத்தனார். இவரது மனைவி முத்துமாரி (33). தம்பதிக்கு பூபதி (12), சஞ்சய் குமார் (10), மகேஸ்வரி (8) என 3 குழந்தைகள். நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியபிறகு கோமதிநாயகம் கட்டிட வேலைக்கு சென்றார். மதியம் வழக்கம்போல் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு 3 மணியளவில் மீண்டும் வேலைக்கு சென்றார். மாலை 4 மணியளவில் மூத்த மகன் பூபதி பள்ளியில் இருந்து வீடுதிரும்பியபோது முத்துமாரி கத்தி குத்துகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். இதை பார்த்து அலறிய பூபதியின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலை அடுத்து வீடு திரும்பிய கோமதிநாயகம், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். தகவலறிந்து விரைந்து வந்த எஸ்பி அருண் சக்திகுமார், சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் வரவழைக்கப்பட்ட கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடங்களை பதிவு செய்துசென்றனர். இதே போல் அங்கு வந்த மோப்ப நாய், வீட்டில் இருந்து கழுகுமலை ரோடு, காந்திநகர் பகுதியில் சுற்றியபடி மீண்டும் வீட்டிற்கு வந்து படுத்து கொண்டது.இதுகுறித்து வழக்குப் பதிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், முத்துமாரியின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முத்துமாரியின் செல்போனை கைப்பற்றி அதில் பதிவான எண்களை கொண்டு கொலையாளிகள் குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சங்கரன்கோவிலில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வியாபாரியின் கையை வெட்டி மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதன்சுவடு மறைவதற்குள் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : death ,Sankarankoil ,
× RELATED சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில்...