×

கருணை அடிப்படையில் வேலை கிடைப்பதில் தாமதம் இரட்டை கொலையில் இறந்தவரின் மனைவி திடீர் தர்ணா போராட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருச்சி, ஜூன் 21: திருச்சியை உலுக்கிய இரட்டை கொலை வழக்கில் இறந்தவரின் மனைவி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தனக்கு கிடைக்க வேண்டிய அரசு வேலையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று மாலையிலிருந்து இரவு வரை தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருச்சென்னம்பூண்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது நண்பர் வின்சென்ட். இருவரும் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி திருச்சியிலிருந்து திருச்சென்னம்பூண்டிக்கு பைக்கில் புறப்பட்டனர். ஓயாமாரி அருகே மர்ம நபர்கள் சிலர் அவர்களை வெட்டியதில் இருவரும் இறந்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக திருச்சி கோட்டை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக 8க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வன்கொடுமை அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு பணப்பயன்கள் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்.
கொலையான செந்தில்குமாருக்கு சுபத்ரா(29) (அப்போது கர்ப்பிணியாக இருந்தார்) என்ற மனைவியும், ஜெசிமா(5), ஜெனிகா(5) என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர்.

சில மாதங்கள் கழித்து சுபத்ராவுக்கு ஆண் குழந்தை தனிஷ்குமார் (2) பிறந்தது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்காக கருணை அடிப்படையில் அரசு வழங்கும் வேலைக்கோரி சுபத்ரா திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் விண்ணப்பித்தார். அவரது கல்வி சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்தார். அனைத்தையும் ஆய்வு செய்த பின்னரும் இதுவரை வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆவேசமடைந்த சுபத்ரா, திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் 2வது தளத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு நேற்று மாலை 4 மணியளவில் வந்தார்.

ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, கருணை செழியன் ஆகிய இருவர் மட்டும் சுபத்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சிவதாசுவிடம் கேட்டபோது, ‘சென்னையில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனருக்கு சுபத்ரா தொடர்பான ஆவணங்களை அனுப்பி உள்ளேன். அங்கிருந்து ஆர்டர் வந்ததும், வேலை கிடைத்துவிடும்’ என்றார். இதனால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்றிரவு வரை பரபரப்பு நீடித்தது.

Tags : Grace ,
× RELATED தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் இருபெரும் விழா