×

ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 30ம் தேதி கடைசி

திருச்சி, ஜூன் 21: பாரத பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் படி ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறுவதற்கு அனைத்து விவசாயிகளும் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று திருச்சி கலெக்டர் சிவராசு அழைப்பு விடுத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில், பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி பெறுவதற்கு நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் அந்தந்த தாசில்தார் மற்றும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் (விஏஓ) விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் 24.2.2019 முதல் செல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2 எக்டேர் வரை நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 நிதி உதவி நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது சிறு, குறு நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர, உரிய விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், பட்டா நகல், குடும்ப அட்டை நகல்களை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தாரிடம் அளித்து பயன்பெறலாம். வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.

இதுவரை நிலமானது இறந்த தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர் சம்மந்தப்பட்ட தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வரும் 30ம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து அதன் அடிப்படையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு