திருச்சி, ஜூன் 21: ரங்கத்தில் சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி 23ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 30ம் தேதி சீதா கல்யாண மஹோத்சவம் நடக்கிறது. ரங்கம் வடக்கு சித்திரை வீதியில் இந்து சமய மன்றம் சார்பில் வருடந்தோறும் சமஷ்டி உபநயனம் மற்றும் சீதா கல்யாண மஹோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி 42ம் ஆண்டு சமஷ்டி உபநயனம் வரும் 23ம் தேதி நடக்கிறது. முன்னதாக 22ம் தேதி மாலை 3 மணிக்கு உதகசாந்தி நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. 24ம் தேதி மற்றும் 25ம் தேதி ஆகிய இரு தினங்கள் வேளுக்குடி கிருஷ்ண சுவாமியின் ஏன்? ஏன்? ஏன்? என்ற தலைப்பில் உபன்யாச நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 27ம் தேதி மதி விசாகா ஹரியின் சிஷ்யை நிதியின் சீதா கல்யான சங்கீத உபன்யாசமும் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான சீதா கல்யாணம் 30ம் தேதி காலை 8 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனையுடன் துவங்கி, காலை 10.30 மணிக்கு சீதா கல்யாணம் நடைபெற உள்ளது. மாலை 4 மணி முதல் உள்ளூர் பாகவதர்கள் பங்கேற்கும் வசந்த கேளிக்கை நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு சூர்யபிரியா ரெங்கராஜனின் பகவத்கீதை உபன்யாசமும் அதனை தொடர்ந்து பவ்வளிம்பு உத்சவமும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேய உத்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ரங்கம் வடக்கு சித்திரை வீதி இந்து சமய மன்றத்தினர் செய்து வருகின்றனர்.