×

ராட்சத போர் போட்டு நீரை உறிஞ்சுகின்றன குடிநீர் ஆலைகளால் தண்ணீர் பஞ்சம்? ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தல்

சிவகங்கை, ஜூன் 19: சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் குடிநீர் ஆலைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள், பேரூராட்சிகளில் குளத்து நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் வறட்சி பாதிப்பால் குளங்களில் பெரும்பாலும் நீர் இருப்பதில்லை. குளங்களை சுற்றி அரசு சார்பில் அமைக்கப்படும் போர்வெல்கள், வீடுகளில் போடப்படும் போர்வெல்களால் குளத்து நீர் விரைவில் வற்றுகிறது. மாவட்டம் முழுவதும் தனியார் குடிநீர் ஆலைகள் அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் சுமார் 30க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் உள்ளன. காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளில் தனியார் குடிநீர் ஆலைகள் அதிகப்படியாக தொடங்கப்பட்டு வருகின்றன. முன்பு குடியிருப்பு பகுதிகள் இல்லாத வயல்வெளி பகுதிகளில் தொடங்கப்பட்டு வந்த குடிநீர் ஆலைகள் தற்போது குடியிருப்பு பகுதி அருகிலேயே தொடங்கப்படுகின்றன. இந்த ஆலைகளில் ராட்சத போர் மூலம் நீர் எடுக்கப்பட்டு பாட்டில்கள், கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வேன், லாரிகளில் நீர் எடுத்துச்சென்று கிராமங்களில் விற்பனை செய்யப்படுகிறது. வீடுகள் மற்றும் அரசு சார்பில் போடப்படும் போர்வெல்கள் சிறிய அளவிலானவையாகும். ஆனால் தனியார் ஆலைகளில் ராட்சத போர்வெல்கள் அமைக்கப்படுகின்றன. இந்த ராட்சத போர்களால் ஆலைகளை சுற்றி சுமார் இரண்டு, மூன்று கி.மீ சுற்றுப்பகுதியிலுள்ள கிணறுகள், வீடுகளில் உள்ள போர்வெல்கள் மற்றும் அரசு சார்பில் போடப்பட்டுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது.

மேலும் வயல் பகுதிகளில் உள்ள ஆலைகளால் வயல் கிணறுகளில் நீர் மட்டம் ஆழத்திற்கு செல்வதால் நீர் பாய்ச்ச முடியாத நிலையில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பல இடங்கிளில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி ஆலைகளுக்கு சீல் வைத்தாலும் மீண்டும் சில மாதங்களிலேயே இந்த ஆலைகள் திறக்கப்படுகின்றன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிதான் கிராமங்களில் இருக்கும் ஒரே குடிநீர் ஆதாரம். ஆனால் அவைகளையும் சிதைக்கும் வண்ணம் அதன் அருகிலேயே தனியார் போர்வெல்கள் போடப்படுகின்றன. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். சீல் வைக்கப்பட்ட ஆலைகளைக்கூட சில மாதங்களிலேயே திறக்க அரசு அதிகாரிகள் உதவி செய்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் குடிநீர் ஆலைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதியில் சுமார் மூன்று கி.மீ சுற்றளவிலுள்ள ஆலைகளை மூட வேண்டும். புதிய ஆலைகளுக்கு அனுமதியளிக்கக்கூடாது. குடிநீர் ஆலைகளுக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றார்.

Tags : warfare Water famine ,
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்