பழநி, ஜூன் 19: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஹோட்டல் கண்பத் கிராண்ட் நிறுவனம் சார்பில் அன்னாபிஷேக விழா நடந்தது. பழநி கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ளது பெரியநாயகி அம்மன் கோயில். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் நேற்று மாலை சாயரட்சை பூஜையின் போது உலக நலன், உலக அமைதி, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அன்னாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசங்களை வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விக்னேஸ்வர் பூஜை, புண்யாவஜ்னம், சங்கு பூஜை, கலச பூஜை, ஹோமம், பூர்ணாகுதி ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு கலசம் கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி, பெரியநாயகி அம்மன், சோமஸ்கந்தர், அருணகிரிநாதர், நடராஜர், சிவன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. த்தொடர்ந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி விவேகானந்தன், வர்த்தகர் சங்க நிர்வாகி மதனம், கட்டிடவியல் வல்லுனர் நேரு, முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கண்பத் கிராண்ட் ஹோட்டல் உரிமையாளர்கள் ஹரிஹரமுத்து, செந்தில் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.