ஆத்தூர், ஜூன் 19: மாவட்டத்தி–்ல் கடும் வறட்சி நிலவுவதால் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் அரளி செடிகள் காய்ந்து போனது. சேலம் -உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் அமைந்துள்ளது. ஏறத்தாழ 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் பகுதியில் அரளிச்செடிகள் நட்டு வளர்த்து வருகின்றனர். வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன்டைஆக்சைடை ஏற்கும் இந்த செடிகள் இரவு நேரங்களில் இருசாலைகளிலும் செல்லும் வாகனங்களின் மின்விளக்கு ஒளியினால், வாகன ஒட்டிகளுக்கு பாததிப்பு ஏற்பாடதவாறு பாதுகாக்கவும் செய்கிறது.
சேலம் மாவட்டத்தில் மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் பகுதியில் நீர்நிலைகள் வறண்டு போய் கிணறுகளில் தண்ணீர் வற்றியுள்ளது. இதனால் குடிநீர் மட்டுமின்றி மற்ற பயன்பாட்டுக்கான தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரளி செடிகளுக்கு தேவையான தண்ணீரை பாய்ச்சவில்லை. செடிகள் காய்ந்து கருகி வருகிறது. சாலையை பராமரித்து வரும் அதிகாரிகள், செடிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.