×

மூதாட்டியை ஏமாற்றி நகை திருடிய பெண்கள் 3 பேருக்கு போலீஸ் வலை

தேன்கனிக்கோட்டை,ஜூன் 19:தளி அருகே சென்னமாளம் கிராமத்தைச் சேர்ந்த பாபன்னா மனைவி புட்டம்மா(65). இவர் கடந்த ஏப்ரல் 12ம் தேதி தளியில் உள்ள வங்கியில் பணம் எடுத்து கொண்டு மீண்டும் கிராமத்திற்கு பஸ்சில் திரும்பினார். சென்னமாளம் கிராமத்தில் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து செல்லும்போது 3 பெண்கள் அவ்வழியாக வந்தனர். அப்போது, காட்டுப்பகுதியில் தனியாக நடந்து செல்கிறீர்கள், நகைகளை பத்திரமாக வைத்து கொள்ளுமாறு அந்த பெண்கள் புட்டம்மாவிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பெண்கள் புட்டம்மாவிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க காசுமாலையை வாங்கி பொட்டலம் கட்டி பத்திரமாக வீட்டிற்கு சென்று போட்டுகொள்ளுமாறு கூறினர். அந்த பொட்டலத்தை வாங்கிய புட்டம்மா வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்தபோது நகைக்கு பதில் சிறிய கற்கள் இருந்துள்ளன. இதனை பார்த்து, அதிர்ச்சியடைந்த புட்டம்மா உடனடியாக அப்பகுதியில் பெண்களை தேடி பார்த்துள்ளார். அங்கு யாரும் இல்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த புட்டம்மா 2 மாதத்திற்கு பின்னர் தளி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், தளி எஸ்ஐ சிவராஜ் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மூன்று பெண்களை தேடி வருகிறார்.

Tags : jewelery ,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை