கிருஷ்ணகிரி, ஜூன் 19: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நாப்கின் வென்டிங் மற்றும் எரியூட்டும் கருவி இந்தியன் வங்கி சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்தியன் வங்கி, கிருஷ்ணகிரி மண்டலம் சார்பில், காந்தி சாலை கிளை மூலம் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நாப்கின் வென்டிங் மற்றும் எரியூட்டும் கருவியை நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் திருமாவளவன் மகளிர் பள்ளிக்கு, நாப்கின் வென்டிங் மற்றும் எரியூட்டும் கருவிகளை நன்கொடையாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கர், கிளை மேலாளர்கள் செல்வராஜ், சரவணன், நிதிசார் கல்வி ஆலோசகர் பூசாமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனர்.