×

தர்மபுரியில் அடுத்தடுத்து மேற்கூரையை பிரித்து 4கடைகளில் கொள்ளை போலீசார் விசாரணை

தர்மபுரி, ஜூன் 19: தர்மபுரியில் மேற்கூரையை பிரித்து 4 கடைகளில் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தர்மபுரி காமாட்சியம்மன் தெருவை சேர்ந்தவர் அன்பு (49). இவர் தர்மபுரி- கிருஷ்ணகிரி மெயின் ரோடு புரோக்கர் ஆபிஸ் பஸ் ஸ்டாப் அருகே தனியார் கேஸ் ஏஜென்சி அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை 10 மணிக்கு அலுவலகத்தை திறந்து உள்ள சென்றார். அப்போது பொருட்கள் சிதறி கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அன்பு மேற்கூரையை பார்த்த போது, மர்மநபர்கள் கூரையை பிரித்து உள்ளே இறங்கி அலுவலகத்தில் இருந்த ₹68 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில், ஒரு கொள்ளையன் முகத்தில் துணியை மறைத்து வைத்து கட்டியபடி அலுவலகத்தில் இறங்கி பணத்தை எடுத்து சென்றது பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதை, தர்மபுரி டவுன் போலீசார் கைப்பற்றி கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இதுபோல், பக்கத்து கடையான பச்சியப்பனின் (55) ஆட்டோமொபைல்ஸ் கடையில் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி ₹32 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், கார்டெக்கரேசன் மற்றும் இரும்புகடைகளிலும் கொள்ளையர்கள் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கியுள்ளனர். ஆனால் கடை உரிமையாளர்கள் பணம் கொள்ளை போகவில்லை என்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்பேரில், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. தர்மபுரி-கிருஷ்ணகிரி மெயின் சாலையில் உள்ள இந்த 4 கடைகளிலும் கொள்ளையர்கள் புகுந்து பணம் கொள்ளையடித்த சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.


Tags : Dharmapuri ,
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்