காரிமங்கலம், ஜூன் 19: காரிமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு, வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில், விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: காரிமங்கலம் வட்டாரத்தில் மழை பெய்து வரும் நிலையில், மானாவாரி இயக்கம் செயல்பட்டு வரும் தொகுப்பு கிராமங்களான காரிமங்கலம், எலுமிச்சனஅள்ளி, வெலகலஅள்ளி தொகுப்பு சுற்றுவட்டார கிராமங்களில், கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு ₹500 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பி.எம்.கே.எஸ்ஒய் திட்டத்தின் மூலமாக சிறு,குறு விவசாயிகளுக்கு 100சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசன கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது காரீப் பருவத்தில் தேவையான, சிறுதானிய விதைகளான ராகி, கம்பு, சாமை மற்றும் பயறு வகைகள் உளுந்து, பச்சை பயறு, காராமணி டி.எம்.வி13 ரக நிலக்கடலை மற்றும் உயிர் உரம், நுண்ணூட்டச்சத்து, இடு பொருட்கள் ஆகியன காரிமங்கலம் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு 50சதவீத மானிய விலையில், விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, காரிமங்கலம் வட்டார விவசாயிகள், மானிய விலையில் இடுபொருட்களை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.