×

போலீஸ் விசாரணை தஞ்சை அகழி கோட்டை அருகே வசிக்கும் 2,000 வீடுகள் இடிப்பதை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜூன் 19: தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக அகழி கோட்டை சுவற்றில் வசிக்கும் 2 ஆயிரம் வீடுகளை இடிக்காமல் மாற்று வழியில் திட்டத்தை அமல்படுத்த சிவகங்கை பூங்கா அருகே அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏவும், அமமுக மாநில பொருளாளருமான ரங்கசாமி கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக அகழி கோட்டை சுவற்றில் குடியிருக்கும் 2 ஆயிரம் வீடுகளை மாநகராட்சி நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்திவிட்டு அங்கு பூங்கா அமைக்க உள்ளதை மறுபரிசீலனை செய்து வீடுகளை இடிக்காமல் அகழியை தூர்வார வேண்டும். நகரின் மையப்பகுதியில் உள்ள காமராஜர் மார்க்கெட், கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அகற்றி விட்டு அங்கு புதிய கடைகள் கட்ட வேண்டிய அவசியமில்லை. சீனிவாசபுரம் செக்கடியில் உள்ள குப்பை கிடங்கில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர் சிவ.ராஜமாணிக்கம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலுகார்த்திகேயன் மற்றும் பலர் பங்கேற்றனர்.முன்னதாக ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்தை கெடுக்காதே என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அமமுக சார்பில் பனகல் கட்டிடம் முன் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்ததையடுத்து சிவகங்கை பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது.


Tags : Police investigation ,houses ,demolition ,Thanjavur Trench Fort ,
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...