அரியலூர், ஜூன் 19: தமிழக முதல்வர் கடந்த 2014- 2015ம் ஆண்டு சட்டமன்ற பேரவை விதி 110ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சமுதாய வளர்ச்சக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015ம் ஆண்டு முதல் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு விருது வழங்கப்படும். முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ.50,000 ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 2019ம் ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆகஸ்ட் 15ம தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படும்.விருதுக்கு 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட தகுதி வாய்ந்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். அதாவது 1.4.2018 அன்று 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் அல்லது 31.3.2019 அன்று 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 2018-19ம் ஆண்டில் அதாவது 1.4.2018 முதல் 31.3.2019 வரை மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்க வேண்டும்.
சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருப்பவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு சமுதாயத்தில் கண்டறியக்கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசு பணியில் உள்ளவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். உள்ளூர் சமுதாய மக்களிடம் அவர்களுக்குள்ள மதிப்பை இவ்விருதுக்கான பரிசீலனையில் கணக்கில்கொள்ளப்படும்.விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பெற்று கொள்ளலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஜூலை 2ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.