×

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்களிடம் 10 பவுன் செயின் பறிப்பு

சிவகிரி, ஜூன் 19: புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா (68), நவதானிய வியாபாரி. இவரது மனைவி திருமலைவடிவு (60). இவரது மூத்த மகன் முருகன் (35), கத்தாரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திருவளர்செல்வி (29). இத்தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. சுப்பையா, மூத்த மகன் மற்றும் இளைய மகன் குடும்பத்தினர் என கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு திருவளர்செல்வி, அவரது குழந்தைகள் மற்றும் செங்கோட்டையில் இருந்து வந்திருந்த உறவினர் வீரலட்சுமி (70) ஆகியோர் வீட்டின் கீழ் தளத்திலுள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், திருவளர்செல்வி அணிந்திருந்த 45 கிராம் தங்கச்செயினையும், வீரலட்சுமி அணிந்திருந்த 40 கிராம் தங்கச் செயினையும் பறித்துக் கொண்டு தப்பியோடினான். திடுக்கிட்டு எழுந்த இருவரும் சத்தம் போடவே, குடும்பத்தினர் எழுந்து தேடினர். ஆனால் மர்மநபர் சிக்கவில்லை. இதுகுறித்து சுப்பையா புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
வீரவநல்லூர்: வீரவநல்லூர் நயினார் காலனியை சேர்ந்தவர் குட்டிதுரை மனைவி லீலாவதி(47), விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் திருமணமாகி திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த பிரபாகரன்(45) என்பவருக்கும் வயல் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று காலை லீலாவதியின் வயலுக்கு சென்ற பிரபாகரனும், அவரது கூட்டாளிகளும் வயலில் போடப்பட்டிருந்த வாழைக்கன்றுகளை வெட்டி சாய்த்துள்ளனர். இதை பார்த்த லீலாவதி தடுக்கவே அவரது கையிலும் வெட்டு விழுந்துள்ளது. இதில் காயமடைந்த லீலாவதியை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து லீலாவதி கொடுத்த புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரன், அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

இதேபோல் சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் சமுத்திரம் மனைவி வசந்தா (50). இவரது மகன் மாரிச்செல்வம், மகள் கஸ்தூரி ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமுத்திரம் இறந்துவிட்டதால் வசந்தா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், வசந்தாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வசந்தாவை, தகவலறிந்து வந்த சுரண்டை போலீசார் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தம்பியை ஸ்குரு டிரைவரால் குத்திய அண்ணன் கைது
வி.கே.புரம்: வி.கே.புரம் மேலக்கொட்டாரத்தை சேர்ந்தவர் பட்டாபிராமன் (44). இவரது தம்பி ராஜா சுப்பிரமணியன்(38). இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக முன்பகை இருந்து வந்தது. நேற்று வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பட்டாபிராமன், ஸ்குரு டிரைவரால் ராஜா சுப்பிரமணியனை குத்தினார். இதில் காயமடைந்த ராஜா சுப்பிரமணியன் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் வி.கே.புரம் எஸ்ஐ சுரேஷ்குமார் வழக்கு பதிந்து பட்டாபிராமனை கைது செய்து விசாரித்து வருகிறார். பாவூர்சத்திரத்தில் மாரடைப்பால் வியாபாரி பலி பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம்  அருகே உள்ள திருமலாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கணேசன்  (60). காய்கறி வியாபாரியான இவர், நேற்று இரவு 10 மணியளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மலையராமபுரம் பகுதியில் செல்லும்போது திடீரென மயக்கம் ஏற்படவே மொபட்டை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகிலுள்ள பூட்டிய கடையின் வாசலில் அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார். நேற்று  காலை அவ்வழியே சென்றவர்கள், இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல்  நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். எஸ்ஐக்கள் எபின், கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 மாத கர்ப்பிணி
தூக்கிட்டு தற்கொலை
சிவகிரி: ராயகிரி அருகே உள்ள துரைச்சாமியாபுரம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (25). இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகள் புஷ்பவள்ளி (19) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது புஷ்பவள்ளி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது புஷ்பவள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவலறிந்த சிவகிரி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் புஷ்பவள்ளி தனது தந்தையிடம் குடும்ப செலவுக்கு பண உதவி கேட்டதாவும், அவர் அலட்சியப்படுத்தியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. புஷ்பவள்ளிக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் தென்காசி ஆர்டிஓவும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : women ,home ,
× RELATED பெண்களின் தாலிக்கு ஆபத்து…...